Wednesday, April 18, 2007

ஸென் - வாழ்க்கை

ஸென் - ஒரு எளிய அறிமுகம்
ஸென் - என்ன சொல்கிறது.
ஸென் - தேடல்
ஸென் - இரு தத்துவங்கள்


வாழ்க்கை ?

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ளது...தொட்டுத் தொடரும் நிகழ்வுகளின் ஊடான பயணம்...நிஜமும்,நிழலுமான காரணிககளின் தன்மைகள், குறுக்கீடுகள்,விளைவுகளுக்கு தனி நாம் தரும் பிரதிபலிப்புகள்தான் வாழ்க்கை....

இப்படி வாழ்க்கையின் அர்த்தம் சொல்வது இப்பதிவின் நோக்கமில்லை. அதை பற்றி இங்கே பேசப்போவதுமில்லை. வெறுமனே சில கேள்விகளை மட்டும் வைக்கிறேன்...யோசித்துப் பாருங்கள் விடைகள் புலப்படலாம்.....

வாழ்வின் ஆரம்பத்தில் எப்படி இருந்தீர்கள்?....

அப்போது வாழ்வியலின் பொதுவான நிபந்தனைகள், நிர்பந்தங்களுக்கு கட்டுப் பட்டா வாழ்ந்தீர்கள்?

கண்கள் விரிய ஆசை ஆசையாய் தெரிந்ததையெல்லாம் பாரபட்சமில்லாமல் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டு, வலியையும் வேதனையையும் மறைக்காது வீரிட்டு அழுது புரண்டு ஒவ்வொரு கணத்தையும் ரசித்து ரசித்து வாழ்ந்தீர்களே நினைவிருக்கிறதா?

வளர வளர இதையெல்லாம் இதையெல்லாம் எப்படி மறந்தீர்கள் அல்லது ஏன் மறுத்தீர்கள்?

இறுக்கம் சூழ்ந்த தனித்தீவாய் உங்களை மாற்றியது எது?

இதற்கெல்லாம் நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்...யோசியுங்கள்.

தேவைகளுக்கும்,ஆசைகளுக்கும் இடையேயான வித்தியாசம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

தேவைக்கும்,ஆசைக்கும் இடையே வேறுபாடு அதிகமாகும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?.

தேவைகள் மனிதனை இயல்பில் வைத்திருக்கும்....ஆசையோ மனிதனை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் என்பதையாவது உணர்ந்திருக்கிறீர்களா?

காம(Lust), க்ரோத(Anger), லோப(Greed),மோஹ(Self Love),அஹங்கார்(Ego) என்கிற ஐங்கூறுகளை விலக்குதல் சாத்தியமா? உங்களால் அது முடியுமா?

இவையொன்றும் கடினமான கேள்விகள் இல்லை...ஆனால் இந்த கேள்விகளை நாம் தவிர்த்து விடுகிறோம். சமயம் கிடைக்கும் போதெல்லாம் இது மாதிரியான கேள்விகளை உங்களுக்குள்ளே எழுப்பி பாருங்கள்.....

எல்லா பதில்களும் நம்மிடம்தான் இருக்கிறது, அதை தெரிந்து கொள்ள சரியான கேள்விகள் இல்லாததுதான் குறை என ஸென் சொல்கிறது....

7 Comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தேவைகளுக்கும் ஆசைக்கு வித்தியாசமா? அது நபருக்கு நபர் எல்லா விஷயத்திலும் மாறுபடுகிறது. எனக்கு ஓவன் வாங்கணும் என்றால் அது தேவையா என்ற கேள்வி வீட்டு ப் பெரியவர்களுக்கு வருகிறது.அப்படி ஆசை என்று அதைப் புறக்கணித்தால் இப்படித்தான் ஒருகாலத்தில் கேஸ் ஸ்டவும் ஆசையாக இருந்திருக்கும் இன்று தேவையாகி விடவில்லையா.?
ஆசை என்று எதையாவது வரையறுத்தோ சொல்லியோ தேவையை சுருக்கி வைக்கறோமோன்னு தோணுது..

என்னவோ புலம்பல் மாதிரி இருக்கோ. படிச்சவொடனே இதான் தோணிச்சு.
நீங்க எதோ தத்துவம் எழுதி இருக்கீங்க நான் பாட்டுக்கு ...

சென்ஷி said...

உண்மைதான் முத்துலஷ்மி அக்கா...

ஆனா.. ஒண்ணு புரிஞ்சுக்குங்க. நீங்க இப்போ கேஸ் ஸ்டவ் வாங்க முடியற விலையில அப்போ நினைச்சுகூட பாக்க முடியறதில்ல. இன்னமும் எனக்கு தெரிஞ்சு நிறைய வீடுகள்ல தமிழ்நாட்ல அரசாங்கம் கேஸ் ஸ்டவ் கொடுத்தப்புறம் தான் உபயோகிக்க ஆரம்பிச்சாங்க.

என்னை ஒரு நண்பர் இப்படி தேவைக்கும், ஆசைக்கும் வித்தியாசம் கேட்டப்ப நான் சொன்னது -

ஒரு பொருள் இல்லாட்டியும் உங்களோட பொழுது நல்லபடியா போகும்னா அதை வாங்காதீங்க.

அத வாங்குறதால உங்களுக்கு சிரமம் குறையும்ன்னு யோசிச்சா வாக்கிடுங்க

அவரு என்கிட்ட அட்வைஸ் கேட்டது வீட்டுக்கு ஸ்பூன், டம்ளர், பாத்திரம் எல்லாம் அடுக்கி வைக்க ஒரு பெரிய டிசைன்ல வாங்கணுமா வேணாமான்னாரு. அதுக்கப்புறம் அந்த பாத்திரமும் வாங்கல. என்கிட்ட அட்வைஸும் கேட்டதில்ல.

பங்காளி... said...

//....ஆசை என்று எதையாவது வரையறுத்தோ சொல்லியோ தேவையை சுருக்கி வைக்கறோமோன்னு தோணுது.. //

முத்து லட்சுமி நீங்கள் சொல்வது எதார்த்தம்....நாம் அனைவரும் எதார்த்தத்தில் வாழவே பழகியிருக்கிறோம், அதன் பொருட்டு நிறைய சமரசத்திற்கும் நம்மை தயாராக்கி வைத்திருக்கிறோம். எதார்த்தத்தினை மீறும் போதுதான் சவால், சோதனை, அழுத்தங்கள் என அதீதங்கள் நம்மீது விழுகிறது. எதார்த்தத்திற்கு கீழே பெரும்பாலும் இயலாமையே நம்மை சூழ்ந்துகொள்கிறது.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்...சென்ஷி அதான் நானே சொல்லிட்டேனே இது நபருக்கு நபர் வித்தியாசப்படும்ன்னு...அவங்கவங்க வாங்கும் திறனை யும் வாழ்க்கை முறையும் கூட இதை நிர்ணயிக்கலாம்.

வரப்போற பொண்ணு பாடு கஷ்டம் தான் போல சரியான கஞ்சப்பிசினாரியோ சென்ஷி?

\\ஒரு பொருள் இல்லாட்டியும் உங்களோட பொழுது நல்லபடியா போகும்னா அதை வாங்காதீங்க.//

ஹ்ம்...இதுக்கு ஒரு பதிவு போடற அளவு விளக்கம் இருக்கு என்கிட்ட அப்புறமா போடறேன்.

\\சவால், சோதனை, அழுத்தங்கள் என அதீதங்கள்//
இவைஎல்லாம் இல்லன்னா வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது
பங்காளி.

மங்கை said...

தேவைகளும் ஆசைகளும் எளிமையா இருக்குற வரைக்கும் வாழ்க்கை ஆராக்கியமா இருக்கு...

ஏற்றம் இறக்கம், பள்ளம், படுகுழி, இது நம்ம பாதையில வராம இருக்குறது இல்லை,,

ஆனா சம நிலைக்கு வந்த அப்புறம் அந்த சந்தோஷத்த அனுபவிக்கிற பக்குவம் இருக்குறது இல்லை
மறுபடியும் சுரண்டல், சுயநலம், பேராசை தான் தலை தூக்குது...
ஹ்ம்ம்ம்

ரொம்ப யோசிக்க வைக்குது...

பங்காளி... said...

சென்ஷி....

தேவையின் ஆசைகளுக்கும்...ஆசையின் தேவைகளுக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது.

ம்ம்ம்ம்...குழப்புறேனோ....

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
ம்...சென்ஷி அதான் நானே சொல்லிட்டேனே இது நபருக்கு நபர் வித்தியாசப்படும்ன்னு...அவங்கவங்க வாங்கும் திறனை யும் வாழ்க்கை முறையும் கூட இதை நிர்ணயிக்கலாம்.

வரப்போற பொண்ணு பாடு கஷ்டம் தான் போல சரியான கஞ்சப்பிசினாரியோ சென்ஷி?

\\ஒரு பொருள் இல்லாட்டியும் உங்களோட பொழுது நல்லபடியா போகும்னா அதை வாங்காதீங்க.//

ஹ்ம்...இதுக்கு ஒரு பதிவு போடற அளவு விளக்கம் இருக்கு என்கிட்ட அப்புறமா போடறேன்.//

:)))

எனக்கு சிரிப்புத்தான் வருது.. உங்க வாதத்தை கேட்டு....

இருந்தாலும் நீங்க போடப்போற ஆசை, தேவைகள் பதிவ படிச்சுட்டு அப்புறம் என் பதில பதிவா (அது ரொம்ப கஷ்டம்ன்னு நெனக்கிறேன்) இல்லன்னா பின்னூட்டமா சொல்றேன்...

:))

சென்ஷி