Monday, February 05, 2007

சாய் அற்புதமா....

சாய் அற்புதமா?...என்கிற முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதை பதிகிறேன்.இனி நான் விவரிக்கப் போகும் இரண்டு சம்பவங்களும் தற்செயலான நிகழ்வுகளா அல்லது அந்த சூழல் தந்த அமானுஷ்ய உணர்வுகளினால் அவை அற்புதங்கள் என நினைக்க வைத்தனவா என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை......இயன்றவரை மிகைப்படுத்துதல் இல்லாது நேர்மையாக பகிர்ந்து கொள்ள நினைத்தேன் பகிர்ந்து கொள்கிறேன்....அவ்வளவே.




இது நடந்து மூன்று வருடங்கள் இருக்கும்....

அப்போது என்னிடம் ஹுண்டாய் அக்ஸண்ட் இருந்தது. மார்ச் மாத கடைசியில் ஒருநாள் அண்ணா நகர் சாந்தி காலனி அருகில் எனது காரின் வலதுபக்க முன் டயர் பெரிய சத்தத்துடன் வெடித்தது. கீழிறங்கி பார்த்தபோது டயர் தெறித்து கம்பி வலையெல்லாம் பிய்த்துக்கொண்டு கோரமாய் இருந்தது.பக்கத்தில் இருந்த கடையில் சொல்லி ஸ்டெப்னி மாற்றிக் கொண்டு போய்விட்டேன்.

புது டயர் வாங்கவேண்டுமென்று நினைத்தாலும் அது தள்ளிப்போனது(பட்ஜெட்...ம்ம்ம்). இந்த நிலையில் தமிழ்புத்தாண்டுக்கு பெங்களூரு வொயிட்ஃபீல்ட் ஆஸ்ரமத்தில் பாபாவை தரிசிக்கலாமென குடும்பம் ஏகமனதாய் முடிவெடுத்தது. எனது மாமாவும் வருவதாக கூறினார்...டயரை மனதில் கொண்டு அவரது காரில் போய்விடலாமென கூறியிருந்தேன்.

ஏப்ரல் 13....அவர் வீட்டிற்கு சென்றபோது....அவரது காரில் பெட்ரோல் அடைப்பதால் என் வண்டியிலேயே போய்விடலாமென கூற அதிர்ச்சியாக்கினார்....மனுசனோ கோவக்காரர், தடங்கலாய் ஏதாவது சொன்னால் அப்செட் ஆகிவிடுவாரென...மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் விதியின் மேல் பாரத்தைப் போட்டு கிளம்பினேன்.

வழக்கமாய் பெங்களூரு செல்லும் பாதைதானே சமாளித்துக்கொள்ளலாம் என கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்த போது...இந்த தடவை கோலார் வழியே போவோம் என அடுத்த குண்டைப்போட்டார்...கோலார் வழியில் ஒரு ஈ...காக்காயை பார்க்கமுடியாது....அத்தனை வெறிச்சென்ற பாதை....

இந்த இடத்தில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....எனக்கு எப்பொழுதுமே கடவுளிடம் பேரம் பேசுவதோ...கெஞ்சுவதோ பிடிக்காத ஒன்று...அதனால் கடவுளின் உதவியை கேட்கவேண்டுமென தோன்றவே இல்லை.

....ம்ம்ம்ம்...உலகத்தில் உள்ள அத்தனை எண்ணையையும் கண்ணில் ஊற்றிக்கொண்டு வண்டியோட்டினேன் என்றுதான் சொல்ல வேண்டும். இருட்ட ஆரம்பிக்க இனம் புரியாத பயம் கவ்வியவாறே ஒரு வழியாய் பெங்களூரை நள்ளிரவில் அடைந்தோம்.எல்லோரும் களைப்பாய் தூங்க கொட்ட கொட்ட விழித்து வண்டியோட்டியவன் இரவு முழுவதும் அதையே தொடர்ந்தேன்.

மறுநாள் காலையில் ஸ்வாமியின் தரிசனம்......புதுவருடத்தில் ஞானகுருவின் தரிசனமும் அந்த சூழலும் மனதிற்கு இதமாயிருந்தது. தரிசனம் முடிந்த கையோடு சென்னை கிளம்ப வேண்டுமென்பதில் குறியாய் இருந்தேன். பகலிலேயே பயணத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன். மீண்டும் கோலார் வழியேதான் போகவேண்டுமென வற்புறுத்த அவ்வாறே எவ்வித பிரச்சினையுமின்றி சென்னை திரும்பினேன்...

இதிலென்ன அற்புதமிருக்கிறது என்கிற சலிப்பு வந்தால் கொஞ்சம் பொறுங்கள்....

இரண்டு நாள் தூக்கத்தை ஒரே நாளில் தூங்கினேன் என்றுதான் சொல்லலாம்.காலையில் அலுவலகம் கிளம்பும் போது பார்த்தால் வண்டி பஃங்ச்சர்....இப்போது வலது பின் டயர்.

என் ஆட்களை அழைத்து பஃங்சர் போட சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்துவிட்டேன்....கொஞ்சத்தில் எனது ஆட்கள் அழைக்க வெளியே வந்தேன்...சார் ஸ்டெப்னி நல்லா இருக்கு அதை மாத்திடறேன்...நீங்க கிளம்புங்க நான் பஃங்சர் போட்டு வைக்கிறேன் என...தொடர,... சரியாக பார்க்காமல் இம்சையாக்கறானே என எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

அது கிழிஞ்ச டயர்...சரியா பாரு என கோவிக்க...அவன் எரிச்சலாகி ஸ்டெப்னியை தூக்கி என் முன்னால் தரையில் போட...எம்பிக்குதித்தது......ம்ம்ம்ம்ம்ம்ம்

கிழிந்த டயரை நாண்தான் காரில் தூக்கிப்போட்டேன்....இப்போது எந்த கிழிசலுமில்லாமல்,முழுசாய்.... என்னுடைய மனநிலை எத்தகையதாக இருக்கும் என்பதை உகித்துக்கொள்ளுங்கள்.

இதற்கு மேல் இந்த சம்பவத்தை விவரிக்கவோ விவாதிக்கவோ விரும்பவில்லை...ம்ம்ம்ம்ம்ம்




இரண்டாவது சம்பவம்....கடந்த வருடம்....

ஒரு நாள் மதியம் திடீரென புட்டபர்த்தி போய்வந்தால் நல்லாயிருக்குமென தோன்றியது....ஆனால் எப்படி போவது, அத்தனை தூரம் காரோட்டுவதில் ஆர்வமில்லை. அங்கே இதுவரை பேருந்தில் போனதுமில்லை...போவதற்கும் சலிப்பாயிருந்தது....ஆனால் போகவேண்டுமென்கிற உந்துதல் இருந்தது.

கொஞ்சத்தில் திடீரென என் செல்பேசியில் அழைப்பு...அந்த நபர் Air Deccan அலுவலகத்தில் இருந்து அழைத்திருந்தார்...முன்பு எப்போதோ ஒரு தடவை அவரை சந்தித்திருக்கிறேன், பெரிதாய் நினைவில்லை. அவர் என்னிடம் நாளைமுதல் அவர்கள் புட்டபர்த்திக்கு விமானசேவையினை ஆரம்பிக்க இருப்பதாகவும், முதல் ஃப்ளைட்டில் போய் அடுத்த நாள் திரும்பி வர ஒரு Complimentary Ticket அனுப்பியிருப்பதாகவும்...அவசியம் நாளை வரவும்...விமான நிலையத்தில் சந்திக்கிறேன் எனக்கூறினார்.

இத்தனைக்கும் அவர்கள் சேவையில் அதிகம் பறக்காதவன் நான்...கொஞ்ச நேரத்திற்கு ஒன்றுமே புரியவில்லை.....அவர்களின் முதல்நாள் சேவையில் என்னை கட்டணமின்றி அழைத்துப்போய்...அடுத்த நாள் திரும்பவும் கூட்டி வருகின்றனர்....

விவரிக்க இயலாத உணர்வுடன் போய் வந்தேன்...அந்த முறைதான் முதல்முறையாக பாபா என்னை கண்ணோடு கண் நோக்கினார்....சிரித்தார்...அது தற்செயலா.......அற்புதங்களின் தொடர்ச்சியா.....தெரியவில்லை...ம்ம்ம்ம்ம்

நான் ஒரு அரைவேக்காட்டு ஆ(நா)த்திகன் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

3 Comments:

வடுவூர் குமார் said...

நான் போடப்போகும் பதிவுகளை கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்து பிறகு சொல்லவும்.
இதெல்லாம் வார்த்தைகளால் முடிவு காண முயற்சித்தால்,முடிவு தோல்வியில் தான் முடியும் என்பது என் கருத்து.

மங்கை said...

இறைவன் மூலமாகவே இறைவனைக் காணமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை என்று படித்திருக்கின்றேன்.

கோவிலுக்கோ இல்லைனா புனித யாத்திரைக்கோ இறைவன் அருள்
பெறத்தானே போறோம்.திரும்பி
வரும் போது அந்த அனுபவம் நமக்குள்ள ஒரு உணர்வ ஏற்படுத்தனும்.அந்தஉணர்வ /அனுபவத்த (அப்படி ஒன்னு ஏற்பட்டிருந்தா)
மற்றவங்ககிட்ட சொல்ல முடியனும்.
இறை உணர்வு ஏற்பட்டாதான் நம்
பயணம் பூர்த்தி அடையும்னு நான்
நினைக்கிறேன்.

அந்த வகையில உங்களின் இந்த உணர்வை / அனுபவத்தை நான்
மதிக்கின்றேன்.

குமரன் (Kumaran) said...

உங்கள் அனுபவங்களை நன்றாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். என் சாயி அனுபவங்களை இந்தத் தமிழ்மணச் சூழலில் பகிர்ந்து கொள்ளும் மன வலிமை இன்னும் எனக்கு வரவில்லை. :-)